வெளிநாட்டு வேலை-ஏஜென்டுகளுக்கு எச்சரிக்கை
துபாய்:வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்பும் ஏஜென்டுள் மோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.
துபாய் வந்த ரவி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், வளைகுடா நாடுகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் ஆட்களைத் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்துவது சாத்தியமற்றது. அந்த எண்ணமே மத்திய அரசிடம் இல்லை.
ஆட்களை தேர்வு செய்து அனுப்புவதில் மோசடியில் ஈடுபடும் ஏஜென்டுகள் குறித்து அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. இதற்காக விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. மோசடி செய்வோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும்.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து, ஆட்களை தேர்வு செய்யும் ஏஜென்டுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. மேலும், வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும், வசிக்கும் இந்தியர்களின் நலனிலும், வாழ்க்கைத் தரத்திலும் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றன.
வெளிநாடு வாழ் இந்தியர் பல்கலைக்கழகம் தொடர்பான திட்டம் இன்னும் 6 மாதங்களில் முடிவு செய்யப்படும். அந்தப் பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்படும், என்னெனன்ன படிப்புகள் அதில் இடம் பெறும் என்பதை இப்போதே கூற முடியாது.
இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலை பார்க்கச் செல்லும் பெண்களின் நலனை முன்னிட்டு விமான நிலையங்களில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிது என்றார் ரவி.












Click it and Unblock the Notifications