மேட்டூர்: கொளத்தூர் மணி உள்பட 300 பேர் கைது
மேட்டூர்:மேட்டூரில் போலீஸாரின் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி உள்பட 300 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மேட்டூர் அருகேயுள்ள ராம் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உள்ளூர் பிரமுகர்களுக்கு வேலை கொடுக்க கோரியும், தொழிற்சாலையினுள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அணல் மின் நிலையத்தை நிறுத்த கோரியும், தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதை தடுக்க கோரியும் மேட்டூர் விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. போலீஸாரின் தடையை மீறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி உள்பட 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.