சபாநாயகர் மீதான ஊழல் புகார்-அரசு மறுப்பு
சென்னை:திமுகவுக்கு சாதகமாக டாஸ்மாக் மதுக் கடை பார் நடத்த பரிந்துரைத்ததாக சபாநாயகர் ஆவுடையப்பன் மீது அதிமுக கூறியுள்ள ஊழல் புகாரில் ஆதாரம் இல்லை என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து இப்பிரச்சினையைக் கிளப்பினார். அவர் பேசுகையில், சபாநாயகர் ஆவுடையப்பன், தனது பி.ஏ வெங்கடேசன் மூலமாக டாஸ்மாக் மேலாளர் சிவசங்கரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் ரபீக் காதர் மொய்தீன் என்பவருக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறும், இரு டாஸ்மாக் கடைகளில் பார் நடத்த அனுமதி தருமாறும் பரிந்துரைத்துள்ளார்.
இதன் மூலம் தனது அதிகார வரம்பை சபாநாயகர் மீறியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ லெட்டர் பேட் மூலம் பரிந்துரைக் கடிதம் எழுதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில், சட்டசபை விதிப்படி, சபாநாயகர் மீது ஏதாவது புகார் கூறுவதாக இருந்தால் முன் கூட்டியே எழுத்துப்பூர்வமாக அதை அளித்திருக்க வேண்டும்.
அல்லது, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம். ஆனால் இரண்டையும் செய்யத் தவறி விட்டது எதிர்க்கட்சி.
அதிமுக கூறுவது போல சபாநாயகரின் லெட்டர் பேட் மூலம் எந்தப் பரிந்துரைக் கடிதமும் அனுப்பப்படவில்லை. சபாநாயகரின் நேரமுக உதவியாளர் பரிந்துரையின்பேரில் மொய்தீனுக்கு பார் நடத்த உரிமம் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட பின்னர் அது ரத்து செய்யப்பட்டு விட்டது.
அவரை விட அதிக தொகைக்கு ஏலம் கேட்டிருந்த கனி அண்ணாவி என்பவருக்கு உரிமம் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து காதர் மொய்தீன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
யாருக்கும் சாதகமாக பரிந்துரைக் கடிதத்தை சபாநாயகர் அனுப்பவில்லை. தனது அதிகாரத்தையும் அவர் துஷ்பிரயோகம் செய்யவில்லை.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில், சபாநாயகராக இருந்த காளிமுத்து, தனக்கு சாதகமான ஒருவருக்கு எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் ஹோட்டல் நடத்த மிகக் குறைந்த வாடகைக்கு அனுமதித்தார். இதனால் அரசுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார்.
முன்னதாக காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், சட்டசபைக்கென்று சில மரபுகள், விதிகள் உள்ளன. சபாநாயகருக்கு எதிராக புகார் கூறுவதாக இருந்தால் அதற்கென்று உள்ள விதிமுறைப்படிதான் பிரச்சினையை எழுப்ப வேண்டும்.
ஆனால் அதிமுகவினர் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அதிமுக சார்பில் இங்கு கூறப்பட்ட கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார். இதே கருத்தை பாமக தலைவர் ஜி.கே.மணியும் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications