சென்னையில் டாக்டர் கொலை- முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பிரமுகரின் உறவினரான டாக்டர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளை குற்றவாளிள் திருடிக் கொன்று சென்றனர்.
தென் சென்னை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் ஆர்.டி.சீதாபதியின் உறவினர் டாக்டர் ரமேஷ்சந்தர் (35). இவரது மனைவி தமிழரசி. கோட்டூர்புரத்தில் கிளினிக் வைத்துள்ளார். சென்னை மாநகராட்சி மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
![]() |
நேற்று இரவு பொன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்த தனது கிளினிக்கில் இருந்தார் டாக்டர் ரமேஷ்சந்தர். அப்போது இரவு 9.30 மணி இருக்கும்.
டாக்டரின் உதவியாளரான சோனியா (18) பாத்ரூம் சென்றிருந்தார். டாக்டர் மட்டும் அவரது அறையில் இருந்தார். அப்போது அறையில் ஏதோ சப்தம் கேட்பது போலத் தெரிந்ததால் பாத்ரூமிலிருந்து வெளியே வந்துள்ளார் சோனியா.
அங்கு டாக்டர் அவரது இருக்கையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போனார் சோனியா. அந்த அறையிலிருந்து முகமூடி அணிந்த இரண்டு பேர் சோனியாவைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினர்.
பின்னர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் சோனியா. விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், டாக்டர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இருப்பினும் இது நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு காரணத்திற்காக நடந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டாக்டர் ரமேஷ் சந்தரின் கிளினிக் ஒரு வணிக வளாகத்தில் உள்ளது. அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications