ஜெயா டிவியை முடக்க திமுக முயற்சி: ஜெ.
சென்னை: ஜெயா டிவியை முடக்கும் முயற்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மூலம் திமுக முயற்சி செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு ஜெயலலிதா வருகை தந்தார். அப்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான பேர் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், மத்தியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதால் திமுகவின் சர்வாதிகாரப் போக்குக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி வருவதால் தற்போது ஜெயா டிவியை முடக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜெயா டிவிக்கு விளம்பரம் கொடுக்கும் தொழிலதிபர்களையும், நிறுவனங்களையும் மிரட்டி வருகின்றனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த வைகுண்டராஜன் என்பவரிடம் ஜெயா டி.வி.யின் பெரும்பாலான பங்குகள் உள்ளது. அவரை மிரட்டி அவரிடமிருந்து ஜெயா டிவியின் பங்குகளை தங்களுக்குக் கொடுத்து விடுமாறு மிரட்டுகின்றனர்.
கருணாநிதியின் பேரனும், முரெசாலி மாறனின் மகனுமான மத்திய அமைச்சர் தயாநிதி மாறனே நேரடியாக வைகுண்டராஜனை மிரட்டி வருகிறார். அவரது சார்பிலும் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் வைகுண்டராஜனை மிரட்டியுள்ளார். பங்குகளை கொடுத்து விடுங்கள் இல்லாவிட்டால் கம்பி எண்ண வேண்டி வரும் என்று வைகுண்டராஜனை மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்.
ஆனாலும் அவர் பங்குகளை கொடுக்க மறுத்ததால், பல தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். பொய் வழக்குகளை போட்டு அவரது நிறுவனத்தை மூடும்படி செய்துவிட்டனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் வைகுண்டராஜனைக் கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் கையெழுத்திடம் கேட்டுள்ளனர், ஆனால் அவர் மறுத்ததால் கட்டாய விடுப்பில் போக செய்தனர். பின்னர் மாவட்ட டிஆர்ஓ கையெழுத்து போட்டு அவரை கைது செய்ய கோப்புகள் தயாராகிவிட்டன.
எனது ஆட்சி காலத்தில் சட்டசபையில் பேச எதிர்கட்சியினருக்குதான் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. எதிர்கட்சி தலைவராக இருந்த அன்பழகனை மரியாதையுடன் நடத்தினோம். ஆனால் இப்போது சிறிதளவும் மரியாதை கிடையாது.
ஆளும் கட்சியினர் அடிப்படை, பண்பு, நாகரீகத்தை கடைப்பிடிப்பது கிடையாது. சட்டசபையில் அதிமுகவுக்கு அதிக பேச நேரம் கொடுப்பதாக ஆற்காடு வீராசாமி பொய்யான தகவல் அளித்து வருகிறார்.
தமிழகத்தில் தற்போது உள்ள உண்மையான எதிர்கட்சி அதிமுகதான். மதிமுகவும், பிற தோழமைக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றன. ஆனால் மற்ற கட்சிகள் எல்லாம் ஜால்ரா தான் அடித்து வருகின்றனர். அதை அவர்கள் பெருமையாக சொல்கின்றனர். இன்னும் பலமாக ஜால்ரா அடிப்போம் என்றும் கூறிக் கொள்கின்றனர்.
எனது அறிக்கைகளை பத்திரிக்கைகளில் வெளியிடக் கூடாது என பத்திரிக்கை முதலாளிகள், ஆசிரியர்கள் முதல்வர் கருணாநிதியால் மிரட்டப்படுகின்றனர். எனது பேட்டிகளை, அறிக்கைகளை முழுமையாகப் போடக் கூடாது என மிரட்டப்படுகின்றனர்.
இதுகுறித்து நான் சில பத்திரிக்கை ஆசிரியர்கள், முதலாளிகளிடம் கேட்டபோது, என்ன செய்வது, கருணாநிதியே லைனில் (போனில்) வருகிறார் என்று கூறுகிறார்கள்.
முதல்வர் கருணாநிதிக்கு எடுக்கும் பொன்விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொள்ளக் கூடாது என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, எங்களது கோரிக்கையை மதித்து வரமாட்டேன் என அவர் மறுத்துவிட்டார். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications