ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு: மே 9ம் தேதி தீர்ப்பு
சென்னை:சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு மே 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குண்டு வெடித்தது. இதில் அலுவலகம் தரைமட்டமானது. 11 பேர் பலியானார்கள்.
இந்த வழக்கை முதலில் தமிழக போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, இமாம் அலி, ஹைதர் அலி, பழனி பாபா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் முஸ்டாக் அமகது என்பவரைத் தவிர மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டனர். முஷ்டாக் அகமது இன்னும் தலைமறைவாக உள்ளார். வழக்கு விசாரணையின் போது பழனிபாபா கொல்லப்பட்டார். இமாம் அலி என்கவுண்டர் மூலம் பெங்களூரில் கொல்லப்பட்டு விட்டார்.
இதையடுத்து 15 பேர் மீது சென்னை 2வது தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1995ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து மே 9ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ராமசாமி அறிவித்தார். வழக்கில் கைது செய்யப்பட்ட பாட்ஷா உள்ளிட்ட 8 பேர் சிறையில் உள்ளனர். மற்ற 7 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications