ராமர் பாலம்: மே 13 வரை வி.எச்.பி. கெடு
ராமேஸ்வரம்:ராமர் பாலத்தை இடிக்கும் முடிவை மே 13ம் தேதிக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் எச்சரித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நேற்று ராமர் பால பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அசோக் சிங்கால், சுவாமி தயானந்த சரஸ்வதி, பாஜக தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிங்கால் பேசுகையில், ராமர் பாலம் உள்ள பகுதி தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் சொந்தமான பகுதியாக மட்டுமே உள்ளது. ஆனால் பாலத்தை இடித்து விட்டால் இது சர்வதேச பகுதியாக மாறி விடும். இதனால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதல்ல என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறுவது உண்மையல்ல. இது மனிதனால்தான் கட்டப்பட்டது என்பதை நாசா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இந்தப் பாலத்தை இடிப்பதால் யாருக்கும் பலன் இல்லை, நமது நாட்டுக்கு இதனால் இழப்புதான் மிஞ்சும். எனவே மே 13ம் தேதி வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் ராமர் பாலத்தை இடிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிகப் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் சிங்கால்.












Click it and Unblock the Notifications