8000 ஓட்டுநர்-நடத்துநர்கள் நியமனம்: நேரு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 8000 ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறுகையில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் 1 லிட்டருக்கு 5.4 கி.மீ தூரம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சீரான வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதால் தான் இது சாத்தியமாகிறது. இதை விட வேகமாக இயக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
நெல்லையை தனிக் கோட்டமாக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். செலவை குறைக்கும் நோக்கத்தில்தான் 22 கோட்டங்கள் 7 கோட்டங்களாக குறைக்கப்பட்டன.
தற்போது நெல்லையில் முதுநிலை மேலாளர் நியமிக்கப்பட்டுள்ளதால் கோட்டமாக இல்லாவிட்டாலும் பணிகள் விரைவாக நடக்கும்.
புதிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நியமனம் செய்ய தேர்வு நடந்து வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2630 பேருந்துகள் ஓடத் தொடங்கிவி்ட்டன.
இன்னும் 4 மாதத்தில் அனைத்து விரைவு பேருந்துகளும், புதிய பேருந்துகளாக மாற்றப்பட்டு விடும் என்றார் நேரு.