நாய் வளர்ப்பு: வீட்டு வசதி வாரிய உத்தரவுக்கு தடை
சென்னை:தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்போர் நாய்கள் வளர்க்க வீட்டு வசதி வாரியம் விதித்த தடைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை சாந்தி காலனியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் மதுரம். இவருக்கு கடந்த 3ம் தேதி ஒரு கடிதம் வந்தது.
வீட்டு வசதி வாரியம் அனுப்பியிருந்த அக்கடிதத்தில், வீட்டு வசதி வாரிய விதிமுறைகளுக்குப் புறம்பாக நீங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள். உடனடியாக அந்த நாயை வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுக்கான ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மதுரம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், நாய்கள் மனிதர்கள் இல்லை என்றாலும் கூட அவை செல்லப் பிராணிகள். நாய் போன்ற பிராணிகளின் நலனுக்காகத்தான் அரசு மிருக வதை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இப்போது வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை ஏற்று நான் நாயை வீட்டை விட்டு விரட்டி விட்டால் அது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் வாழ உரிமை உள்ளது. வீட்டு வசதி வாரியம் எனக்கு வீடு ஒதுக்கியபோது நாய் வளர்க்கக் கூடாது என்று கூறவில்லை. எனவே அரசின் கொள்கைக்கு விரோதமான இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரணைக்கு அனுமதித்த நீதிபதி மோகன்ராம், வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications