ராமர் பாலத்தை இடித்த இன்னொரு கப்பலும் சேதம்?
சென்னை:ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட இன்னொரு கப்பலும் சேதமடைந்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை சேது சமுத்திரத் திட்டக் கழக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டத்தின் முதல் படியாக கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கிரேன், சில மாதங்களுக்கு முன்பு ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது அந்த பிரமாண்ட கிரேன் சேதமடைந்து கடலில் மூழ்கியது.
இதனால் அப்பகுதியில் பாலத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் கடலை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது. தற்போது கடலை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பலும் அதில் பொருத்தப்பட்டிருந்த மண் அள்ளும் கிரேனும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் தற்போது மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதை சேது சமுத்திரத் திட்டக் கழக அதிகாரிகள் மறுத்துள்ளனர். ஆதாம் பாலப் பகுதியில் வானிலை சரியில்லாத காரணத்தால்தான் மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தை உடைத்து மண்ணை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிரட்ஜருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் சேதமடைந்ததாக கூறப்படும் டிரெட்ஜர் சென்னை துறைமுகத்திற்கு பழுது நீக்குவதற்காக கொண்டு வரப்படுவதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஆனால் எரிபொருள் நிரப்புவதற்காகவே அந்த டிரட்ஜர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications