விபசார கும்பலிடம் சிக்கிய மதுரை பெண்
சென்னை: செனனையில் வேலை பார்த்து வரும் கணவரை சந்திக்க மதுரையிலிருந்து உறவினருடன் வந்த பெண், விபச்சார கும்பலிடம் சிக்கினார். அவரை போலீஸார் மீட்டனர்.
மதுரையை சேர்ந்தவர் பானு (24). இவரது கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார். அவரைக் காண்பதற்காக உறவினர் முருகன் என்பவருடன் சென்னைக்கு வந்தார் பானு.
ஆனால் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்பது தெரியாமலும், அவரைப் பார்க்க முடியாமலும் ஏமாற்றமடைந்தார். இதனால் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்துத் தங்கினர்.
அவர்களைப் பார்த்த ஒரு விபச்சார புரோக்கர் பானுவை விபச்சாரத்தில் தள்ள திட்டமிட்டார். முருகன் வெளியே போயிருந்த சமயமாக பானுவை அணுகிய அந்த புரோக்கர், உனது கணவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன் என்று கூறி அழைத்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய பானு, முருகனுக்குக் கூட தெரிவிக்காமல் அந்த புரோக்கருடன் கிளம்பிச் சென்றார். நேராக தாம்பரத்திற்குக் கூட்டிச் சென்ற புரோக்கர், ஒரு வீட்டில் பானுவைத் தங்க வைத்துள்ளார்.
பின்னர் அவரைக் குளித்து விட்டு தயாராக இருக்குமாறும், பிறகு உனது கணவரைப் பார்க்கப் போகலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பானும் குளிக்கப் போயுள்ளார். அப்போது அவருக்குத் தெரியாமல் பானு குளிப்பதை படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்தப் படத்தைக் காட்டி பானுவை கட்டாயப்படுத்தி பலருடனும் விபச்சாரம் செய்ய வைத்துள்ளார். இதன் மூலம் வருமானம் கிடைக்கவே அதைத் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் விபச்சார தடுப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் அந்த புரோக்கர் சிக்கினார். அவரது பெயர் பன்னீர் செல்வம் என தெரிய வந்தது.
தஞ்சையில் பழக்கடை என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. பன்னீர்செல்வத்துடன் அவரது கூட்டாளி அமல்ராஜன் என்ற பாபுவையும் போலீஸார் கைது செய்தனர்.
பானு மற்றும் சவீதா என்ற இன்னொரு பெண்ணையும் போலீஸார் மீட்டனர்.