புலிகள் பெயரில் ஜெ.வுக்கு மிரட்டல்-பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு விடுதலைப் புலிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈக்காட்டுதாங்கலிலுள்ள ஜெயா டிவியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம் தேதி நெல்லையிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அக்கடிதத்தில், ஜெயா டிவியில் அரசை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரும். ஜெயலலிதா மீது வெடி குண்டு தாக்கல் நடத்தப்படும் என்பது உறுதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் விடுதலைப் புலிகள், வெங்கடேசன், பாளை, என்ஜிஓபி காலனி என்று முகவரி இருந்தது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்திய விசாரணையின்போது, அந்த முகவரியில் வாலிபர் ஒருவர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் எழுதினாரா அல்லது அவருக்கு எதிரிகள் யாராவது இவ்வாறு செய்தனரா என்பது குறித்து நெல்லை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு:
இந் நிலையில் மிரட்டலின் எதிரொலியாக ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரது போயஸ் கார்டன் மற்றும் சிறுதாவூர் பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயா டிவி அலுவலகம் மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications