இன்று முதல் அரை இறுதி: நியூசி.-இலங்கை மோதல்
கிங்ஸ்டன்:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. நியூசிலாந்தும், இலங்கையும் முதல் போட்டியில் மோதவுள்ளன.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதிக் கட்டம் வந்து விட்டது. இன்று முதல் அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் சம பலம் வாய்ந்த நியூசிலாந்தும், இலங்கையும் மோதுகின்றன.
இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 6 முறை மோதியுள்ளன. அதில் ஆளுக்கு 3 போட்டிகளில் வென்று சம நிலையில் உள்ளன. இதேபோல மொத்தம் 67 ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில், 34 ஆட்டங்களில் நியூசிலாந்தும், 29 போட்டிகளில் இலங்கையும் வென்றுள்ளன.
உலகக் கோப்பைப் போட்டியின் லீக் சுற்று மற்றும் சூப்பர் எட்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வென்றுள்ளன. இந்த நிலையில் இன்றைய அரை இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கை அணியைப் பொருத்தவரை ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். அர்னால்டு, தில்ஷான், சமரசில்வா ஆகியோர் நெருக்கடியான நேரத்தில் நிலைத்து ஆடி அணிக்கு வலுவூட்டுகின்றனர்.
பந்து வீச்சிலும் இலங்கை நல்ல பார்மில் உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் மலிங்கா, வாஸ், மகரூப், தில்ஹாரா ஆகியோர் அட்டகாசமாக பந்து வீசி வருகின்றனர். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சுக்கு எதிரணியினர் பயப்படுகின்றனர்.
இவர்களை விட சுழற்பந்து சூறாவளி முத்தையா முரளீதரன்தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியில் அதிக விக்கெட்டுக்களை (19) இவர்தான் வீழ்த்தியுள்ளார்.
முரளீதரனின் பந்து வீச்சு நடுக்கள வீரர்களுக்கு நடுக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளதால், முரளியை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கவே நியூசிலாந்து அணி வீர்ரகள் முயல்வார்கள் என்று அந்நாட்டு கேப்டன் பிளமிங் கூறியுள்ளார்.
பீல்டிங்கிலும் இலங்கை அணி சிறப்பாகவே உள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கை அணி இப்படி சிறப்புடன் இருந்தாலும், ஆல் ரவுண்டர்களுடன் அசத்தல் பலத்துடன் மறுபக்கம் நியூசிலாந்தும் தெம்பாகவே உள்ளது.
புல்டன், மெக்மில்லன், ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளனர். ஸ்டைரிஸ் பந்து வீச்சிலும் அசத்துகிறார். ஷேன் பாண்ட்டின் வேகப் பந்து வீச்சு எதிரணியினருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்கள் தவிர ஜித்தன் படேல், வெட்டோரி ஆகியோரின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது.
இதுவரை நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. எனவே இம்முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் அந்த அணி உள்ளது. அதற்கு இலங்கை முட்டுக்கட்டை போட்டு மீண்டும் கோப்பையை வெல்ல முயலுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.