பிரேம்குமார் கைதாகிறார்-சரணடைய திட்டம்
மதுரை:எஸ்.பி. பிரேம்குமாரை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு மதுரை முதலாவது விரைவு நீதிமன்றம் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்பவரையும், அவரது மகனையும் அடித்து உதைத்து கையில் விலங்கிட்டு தெருத் தெருவாக இழுத்துச் சென்று சித்திரவதை செய்ததாக பிரேம்குமார் மீது நல்லகாமன் வழக்கு தொடர்ந்தார்.
சம்பவம் நடந்தபோது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் பிரேம்குமார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பைரவ சிங் என்ற போலீஸ்காரரின் வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வந்தார் நல்லகாமன்.
வீட்டைக் காலி செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில்தான் நல்ல காமனையும், அவரது மகனையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தினார் பிரேம்குமார். அத்தோடு விடாமல் நல்லகாமன் மற்றும் அவரது மகன் மீது கொலை முயற்சி வழக்கையும் பதிவு செய்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உதவிக் கலெக்டர் தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின்னர் பிரேம்குமார், காவலர்கள் சுப்ரமணியன், செல்லையா, ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நல்லகாமனும் தனியாக பிரேம்குமார் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. இதில் பிரேம்குமார் குற்றவாளி என சமீபத்தில் மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நல்லகாமனும் குற்றவாளி என அது தீர்ப்பளித்தது. இருப்பினும் அவர்களுக்குத் தண்டனை எதுவும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், கீழ் நீதிமன்றத்தில் தன்னைக் குற்றவாளி என அறிவித்ததை எதிர்த்து பிரேம்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார் பிரேம்குமார். நல்லகாமனும் அப்பீல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, நல்லகாமன் மற்றும் அவரிடம் எல்லை மீறி கொண்டதற்காக பிரேம்குமார் உள்ளிட்ட நான்கு போலீஸாருக்கும் தலா 1 மாத சிறைத் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பிரேம்குமார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், போலீஸில் சரணடைவதிலிருந்து பிரேம்குமாருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை செயல்படுத்துவது தொடர்பான வழக்கு ஆவணங்கள், மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு நேற்று முதலாவது விரைவு நீதிமன்றத்திற்கு வந்தது.
அப்போது பிரேம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவித்தனர். ஆனால் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றத்திலிருந்து எந்த உத்தரவும் நேரடியாக வரவில்லை என்று தெரிவித்த நீதிபதி பூபாலன், பிரேம்குமார் உள்ளிட்ட நான்கு காவல்துறையினருக்கும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தார்.
நான்கு பேரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாடிப்பட்டி போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரேம்குமார் உள்ளிட்டோரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சரண் அடைய திட்டம்:
இதற்கிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் சரணடைய பிரேம்குமார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக பிரேம்குமார் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறார். இன்றைக்குள் அவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைவார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இன்று மாலைக்குள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக பிரேம்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பிரேம்குமாரை கைது செய்யாதது ஏன்?
ஜெயேந்திரரைக் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.பி. பிரேமகுமாரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என பாமக எம்.எல்.ஏ.வேல்முருகன் சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசுகையில்,
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், லாட்டரிச் சீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுத்த திமுக அரசை பாராட்டுகிறேன். அதிமுக உறுப்பினர்கள் இங்கு பேசும் போது இந்த ஆட்சியில் உண்மைக்கு மாறாக வழக்கு போடப்படுவதாக கூறினர்.
அது உண்மை இல்லை. கடந்த ஆட்சியில் தான் நிறைய பொய் வழக்குகளை போட்டுள்ளனர். எஸ்பி பிரேம்குமார் உண்மைக்கு மாறாக வழக்கு போட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரேம்குமார் என் மீதும் உண்மைக்கு மாறாக வழக்கு போட்டவர்.
அதற்குதான் இப்போது நீதிமன்றம் அவருக்கு சரியான தண்டனை வழங்கியுள்ளது. ஆனால் அவர் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை சொல்லி தண்டனையில் இருந்து விலக்கு கேட்கிறார்.
நான் இந்த அரசை கேட்டுக் கொள்வதெல்லாம் பிரேம்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்றார்.