மதுரை மக்களை மயக்கிய விமான சாகசம்
மதுரை:இந்திய விமானப்படையின் சூரிய கிரண் விமான சாகசம் மதுரை மக்களை மயக்கியது.
சென்னையில் நடந்தது போல மதுரையிலும் இன்று விமானப்படையின் பவள விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டங்களில் முதல் முறையாக இந்த விமான சாகச நிகழ்ச்சி நடந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் விமான சாகசத்தைப் பார்க்க திரண்டிருந்தனர்.
விரகனூர் அணை-ரிங் ரோடு சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. எள் விழுந்தால் எண்ணெய் ஆகி விடும் அளவுக்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் விமான சாகசத்தைக் காண திரண்டிருந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 6 சூரிய கிரண் ஜெட் விமானங்கள் நடத்திய சாகசம் மதுரை மக்களை மயக்கி விட்டது. இதுவரை இப்படிப்பட்ட சாகச நிகழ்ச்சியை மதுரை மக்கள் கண்டிராததால் சூரிய கிரண் சாகசம் அவர்களுக்கு பெரும் வியப்பையும், திரில்லையும் கொடுத்தது.
இதில் ஒரு விமானம் வானிலேயே இதயம் போன்ற வடிவத்தை புகையால் உருவாக்கிக் காட்டியபோது கூடியிருந்த மக்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சாகச நிகழ்ச்சி நடந்தது.
விமான சாகச நிகழ்ச்சியையொட்டி சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டிருந்தது.