புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை-கருணாநிதி
சென்னை:நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது.
வெடிபொருள், இரும்புக் குண்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் அனைவரையும் விடுதலைப் புலிகள் என்று கூறுவது பொருத்தமற்றது. இதை வைத்து நான் புலிகளை ஆதரிப்பதாக கூறக் கூடாது.
தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதெல்லாம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலை தூக்க தமிழ அரசு அனுமதிக்காது.
தென்காசியில இந்து முன்னணித் தலைவர் கொலை செய்யப்பட்டபோது அதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. இதன் மூலம் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் யாரையும் இந்த அரசு விட்டு வைக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுடைய நோக்கமும், குறிக்கோளும் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புலிகள் எந்தவிதமான பாதகச் செயலையும் செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள்.
அதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டால் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பிரபாகரனை கைது செய்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications