13 காங். எம்எம்எல்ஏக்கள் ரகசிய கூட்டம்சுதர்சனத்திற்கு எதிராக போர்க் கொடி
சென்னை:சட்டசபையில் பேச தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் வாசன், இளங்கோவன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ஆதரவாக இவர்கள் பிரிந்து கிடக்கின்றனர். மேலும் சிலர் தனித்து தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமே சட்டசபையில் தொடர்ந்து பேச வாய்ப்பளிக்கப்படுகிறது, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என எம்.எல்.ஏக்கள் மத்தியில் குமுறல் வெடித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், போளூர் வரதன் தலைமையில் 13 எம்.எல்.ஏக்கள் திடீரென ரகசியக் கூட்டம் நடத்தியுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு உள்ளிட்ட 13 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சவேரா ஹோட்டலில் நேற்று இரவு இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் போளூர் வரதனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
இதில் விசேஷம் எதுவும் இல்லை. 13 பேருக்கும் விருந்தளித்தேன். தேர்தலில் வென்ற பிறகு இதுவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாங்கள் சந்திக்கவில்லை.
விரைவில் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கவுள்ளோம். இதுகுறித்து இதற்கு மேல் விரிவாக கூறுவதற்கில்லை என்றார்.
யசோதாவிடம் கேட்டபோது, இது எங்களது குடும்ப விவகாரம். அதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுவதற்கில்லை என்று மழுப்பலாக பதிலளித்து விட்டுச் சென்றார்.
இருப்பினும் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தை கடுமையாக சாடி பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சிலருக்கு மட்டுமே அவர் தொடர்ந்து சட்டசபையில் பேச வாய்ப்பு தருகிறார். மற்றவர்களைப் புறக்கணிக்கிறார் என்று சுதர்சனம் மீது 13 பேரும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.
இதுகுறித்து டெல்லி சென்று சோனியா காந்தியிடம் புகார் கூறி, சுதர்சனத்தை முதலில் பதவியிலிருந்து நீக்கும்படி கோரவுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்ட சிலர் திமுக ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஜி.கே.வாசனின் ஆதரவோடு சுதர்சனமும் திமுகவை ஆதரித்து பேசி வருகிறார்.
பீட்டல் அல்ேபான்ஸ், ஞானசேகரன் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் அடிக்கடி பேச வாய்ப்பு தரப்படுகிறது. ஆனால் துணைத் தலைவராக உள்ள யசோதா தனக்கு பேச வாய்ப்பே தரப்படுவதில்லை என்று கூட்டத்தில் குமுறினாராம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடையே வெடித்துள்ள இந்தப் புதிய பிளவு சில மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications