இட ஒதுக்கீடு-லேகாசபா, ராஜ்யசபாவில் பெரும்கூச்சல், குழப்பம்- அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி:இட ஒதுக்கீடு, பாஜக எம்பியின் பெண் கடத்தல் விவகாரத்தால் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பின் இன்று மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, குஜராத் மாநில பா.ஜ.க எம்பி பாபுபாய் கத்தாரா போலி பாஸ்போர்ட், பெண் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது கண்டத்திற்குரியது. இதனால் கத்தாராவை கூட்டத் தொடர் முடியும் நாள் வரை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் ஒரே கூச்சல் நிலவியது.
அப்போது திமுக, பாமக, மதிமுக எம்பிக்கள் எழுந்து மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்பிகளும் குரல் தந்தனர்.
ஆனால், பாஜக எம்பிக்கள் தொடர்ந்து கத்தாரா விஷயத்தில் குரல் தந்ததால் தமிழக எம்பிக்களும் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களும் அவையில் மையப் பகுதியை நோக்கி ஓடி இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது காங்கிரஸ், இடதுசாரி எம்பிக்கள் எழுந்து அவரவர் மாநில பிரச்சனைகளை கிளப்பினர். இதனால் பெரும் குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகிறார்கள் என்றே கேட்காத அளவுக்கு குழப்பம் நீடித்தது.
இதையடுத்து அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதே குழப்பம் தான் ராஜ்யசபாவிலும் நீடித்தது. இதனால் அந்த அவையும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications