4 அதிமுக எம்எல்ஏக்களின் நீக்கம் ரத்து
சென்னை:சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்தும், ஜெயலலிதா குறித்தும் அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களால் கொந்தளிப்படைந்த அதிமுக உறுப்பினர்கள் பெரும் அமளியில் குதித்தனர்.
திமுகவினரைப் பார்த்தும், அமைச்சர்களைப் பார்த்தும் அதிமுகவினர் கடும் கோபத்துடன் மிகக் கடுமையாகப் பேசினர். செருப்புகளும் தூக்கிக் காட்டப்பட்டன.
இந்த அமளியைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கலைராஜன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இந்தக் கூட்டத் தொடர் முழுமைக்கும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் நான்கு எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பென்ஷன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். இத்தனை நாட்கள் சஸ்பெண்ட் செய்ததே போதுமானது, அவர்களை மீண்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார் பன்னீர் செல்வம்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, கருணை காட்டி, செய்த தவறை விளக்கி விட்டு நான்கு பேரையும் மீண்டும் அனுமதிக்கலாம் என்றார். இதையடுத்து அவை முன்னவர் அன்பழகன் நான்கு பேரையும் மீண்டும் அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். பிறகு அது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் நான்கு பேரும் நாளை முதல் கூட்டத் தொடரில் பங்கேற்கலாம் என்று அறிவித்தார்.