ஐஸ்வர்யா-அபிஷேக்: பாதிக்கப்பட்ட பக்தர்கள்:விசாரிக்க திருப்பதி கோவில் நிர்வாகம் உத்தரவு
திருப்பதிஅபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தரிசனத்திற்காக வந்தபோது பக்தர்களை வெகு நேரம் காக்க வைத்து அழிச்சாட்டியம் செய்தது குறித்து திருப்பதி கோவில் அதிகாரிகளிடம் கோவில் தேவஸ்தானம் விளக்கம் கேட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடந்து சுவாமியை தரிசிக்க செல்லும்போது சில விநாடிகள் மட்டுமே சுவாமியை தரிசனம் செய்ய கோவில் ஊழியர்கள் அனுமதிப்பதுண்டு.
பெருமாளை மனமுருக வேண்டிக் கொள்ள பக்தர்கள் முயன்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டி விட்டு விடுவார்கள். ஆனால் புதுமணத் தம்பதிகளான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் கோவிலுக்கு வந்தபோது அவர்களுக்கு கோவில் நிர்வாகம் படு தாராளம் காட்டியது.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்ட அவர்கள் அங்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
அதை விடக் கொடுமையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, பச்சன் குடும்பத்தினர் சென்ற பின்னர்தான் தரிசனம் செய்யவே அனுமதிக்கப்பட்டனர். மொத்தமா 3 மணி நேரம் வரை சாதாரண பக்தர்கள் யாரும் சுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர்.
கோவில் நிர்வாகத்தின் இந்த செயல் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியது. மேலும் ஆந்திராவிலும் இது பெரும் சர்ச்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து நேற்று திருப்பதி தேவஸ்தானக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் வருகையால் சாதாரண பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாக அதிகாரி ராமன் சாரி 30 நாட்களுக்குள் இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார்.
கோவிலில் இனிமேல் நடிகர், நடிகைகள், முக்கியப் பிரமுகர்களுக்கு என தனியாக சலுகை அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இவர்களுக்கு விஐபி அந்தஸ்து கிடையாது.
இனிமேல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் விஐபி தரிசனம் இருக்காது. மற்ற நாட்ககளில் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் மட்டுமே விஐபிக்கள் அனுமதிக்கப்படுவர்.
இதுதவிர விஐபி தரிசனக் கட்டணம் ரூ. 200ல் இருந்து 500 ஆக உயர்த்தப்படுகிறது என்றார் கருணாகர ரெட்டி.