நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும்-உயர்நீதிமன்றம்
சென்னைதொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் அஸ்வின் குமார் என்ற மாணவர் இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஏழைகள் மற்றும் வசதி படைத்த மாணவர்களுக்கு இடையே சம நிலையை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது.
இந்த சட்டத்துக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டத்தில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் சம நிலையை ஏற்படுத்தும் வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. சமூக நீதியை நிலை நாட்டும் பொருட்டு, கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறி மாணவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் தொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து முழுமையாக அமலுக்கு வருகிறது.