கத்தாராவை மிஞ்சிய ஆந்திர எம்.எல்.ஏகோர்ட்டில் சரண்-பரபரப்பு வாக்குமூலம்
ஹைதராபாத்:ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ லிங்கையா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் முதலில் கைதான குஜராத் எம்.பி.பாபுபாய் கத்தாராவையே தூக்கி சாப்பிடும் வகையில் பலே மோசடிப் பேர்வழியாக லிங்கையா இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.பாபுபாய் கத்தாரா, மனைவி, மகன் என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணையும், சிறுவனையும் கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்று சிக்கியுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. தெலுங்கான ராஷ்டிரிய சமிதிக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்ளுக்கு இதில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய எம்.பி. நரேந்திராவை தெலுங்கானா கட்சி சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் லிங்கையா என்ற எம்.எல்.ஏவும் இந்த வழக்கில் சிக்கினார்.
இவர் கத்தாராவையே மிஞ்சும் அளவுக்கு மிகப் பெரிய மோசடியைச் செய்துள்ளார். அதாவது தாரா என்பவரை தனது மனைவி என்று கூறி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து பாஸ்போர்ட்டும் எடுத்துள்ளார்.
இந்த தாரா குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து லிங்கையா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் நாம்பள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் லிங்கையா சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் லிங்கையா கொடுத்த வாக்குமூலத்தில், தெலுங்கான கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேந்திராவின் தனி உதவியாளர்தான் ஆள் கடத்தும் கும்பலின் தரகரை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications