சட்டசபையில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்ததால் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வர் கருணாநிதி உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருகிறார்.
இதுதொடர்பாக அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையைக் கிளப்பி அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதன் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், மனு ஆய்வில் உள்ளது. இப்போது விவாதத்தை அனுமதிக்க முடியாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுகவும் வெளிநடப்புச் செய்தது.