ஜால்ரா போட மாட்டோம், 5 ஆண்டுகளும்திமுகவை ஆதரிப்போம் - ராமதாஸ்
சென்னை:திமுக ஆட்சிக்கு பாமக 5 ஆண்டுகளும் முழு ஆதரவு அளிக்கும். அதற்காக திமுகவுக்கு ஜால்ரா போட மாட்டோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக கவுன்சிலர்களுக்குப் பாராட்டு விழா சென்னை நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
சென்னை நகருக்கான 2வது வரைவுத் திட்டத்தை இதுவரை தமிழில் வெளியிடவில்லை. இதிலிருந்தே இந்த நகரம் எதிர்காலத்தில் இந்த நகருக்குச் சொந்தக்கார்ரகளிடம் இருக்கப் போவதில்லை என்று புரிகிறது. பாமகவினர் கனவு காண்கிறார்கள் என சிலர் கூறுகின்றனர்.
ஏன் எங்களுக்குக் கனவு காணும் உரிமை இல்லையா. அரிதாரம் பூசி வந்தவர்கள் நாளை நாங்கள்தான் என்று கனவு காணலாம், ஆனால் இந்த பூமியில் முதலில் தோன்றிய பச்சைத் தமிழர்களான நாங்கள் கனவு காணக் கூடாதா?
கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சியைத் தாக்கிப் பேசலாமா, விமர்சிக்கலாமா என்று சிலர் கேட்கிறார்கள், பரபரப்பாக எழுதுகிறார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்படுத்தி, கட்சிக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் ஒரு தொகுதி உடன்பாடு கொண்டுதான் தேர்தலை சந்தித்தோம். தேர்தலோடு அது முடிந்து விட்டது.
இப்போது பெரும்பான்மை பலம் இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு திமுக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் 5 ஆண்டு காலமும் ஆதரவு தருவோம் என கூறியுள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதேசமயம், அரசியல் நேச தொடர்பு வேறு, தேர்தல் நேச தொடர்பு வேறு. சட்டசபையில் ஜால்ரா தட்டிப் பேச முடியாது (காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் திமுகவுக்கு தொடர்ந்து ஜால்ரா அடிப்போம், அதற்காகப் பெருமைப்படுகிறோம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்).
தமிழகத்தில் மது விலக்கை பூரணமாக அமல்படுத்துங்கள், சாராயக் கடைகளை மூடுங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலம் தேவையில்லை என்று தொடர்ந்து கூறுவோம். காரணம் இவையெல்லாம் மக்கள் நலப் பிரச்சினைகள்.மக்கள் பிரச்சினைகளில் நாங்கள் வாய் மூடிக் கொண்டிருக்க மாட்டோம். விரைவில் எப்படி வித்தியாசமாக நாங்கள் செயல்படப் போகிறோம் என்பதை பிரமாண்டமான பொதுக் கூட்டத்தைக் கூட்டி கூறப் போகிறோம்.
நாங்கள் எதையும் தைரியமாக சொல்பவர்கள், குடிகாரன் கட்சித் தலைவர் பொறுப்பில் (விஜய்காந்த்??) இருக்கக் கூடாது என்று நாங்கள் மட்டுமே துணிச்சலாக கூறினோம். யாராவது அப்படிக் கூறினார்களா? என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் கிரிக்கெட், ரிலையன்ஸ் கடைகளைக் கண்டித்து நக்கல் நாடகமும் நடந்தது.












Click it and Unblock the Notifications