குஜராத்-விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்கெளசர் பீபியை கொன்று எரித்த கொடூரம்
அகமதாபாத்:குஜராத்தை உலுக்கி வரும் போலி என்கவுண்டர் விவகாரத்தை விசாரித்து வந்த சிஐடி பிரிவு டிஐஜி ரஜனீஷ் ராயை நரேந்திர மோடி அரசு திடீரென அப்பொறுப்பிலிருந்து மாற்றியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் பேருந்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த ஷேக்கை போலீஸார் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் கழித்து ஷேக் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். ஆனால் பீபியின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஷேக்கின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது ஷேக் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குஜராத் அரசு ஒப்புக் கொண்டது. மேலும், அவரது மனைவி கெளசர் பீபியும் போலீசாரால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.
இந் நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த சிஐடி பிரிவு டிஐஜி ரஜனீஷ் ராய் திடீரென அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். இவர்தான் ஷேக், அவரது மனைவி மற்றும் ஷேக் கொல்லப்பட்டதை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.
ராய் மாற்றப்பட்டு விட்டதாகவும், விசாரணை தொடர்பான தகவல்களை அவரிடம் வழங்க வேண்டாம் எனவும் குஜராத் மாநில டிஜிபி பாண்டே தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராய் தலைமையிலான போலீஸ் படை, சொராப்தீன் ஷேக், கெளசர் பீபி, பிரஜாபதி ஆகியோரை போலீஸார் அழைத்துச் செல்ல பயன்படுத்திய டயோட்டா குவாலிஸ் காரையும், ஒரு கிரேனையும் கண்டுபிடித்தனர்.
இவர்களை முதலில் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அகமதாபாத் கொண்டு வந்துள்ளனர். இவர்களில் பிரஜாபதியை ஆந்திர போலீஸார்தான் சுட்டுக் கொன்றதாக குஜராத் போலீஸ் கூறுகிறது.
காந்தி நகருக்கு அருகே உள்ள திஷா என்ற இடத்திலிருந்து கெளசர் பீபியை இடம் மாற்றி, அகம் பங்களா என்ற இடத்தில் வைத்து அவரைக் கொன்று பின்னர் உடலை எரித்து விட்டனர்.
அந்த பங்களா உரிமையாளரான ராஜு ஜிரவாலா என்பவரிடம் இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.டி.எஸ்.துள்சி, இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில் கெளசர் பீபி கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டது. ஷேக் கொல்லப்பட்ட சில நாட்களிலேயே கெளசர் பீபியும் கொல்லப்பட்டு விட்டார். உடனடியாக அவரது உடலும் எரிக்ப்பட்டு விட்டது.
அவரது உடல் பகுதிகள் கிடைக்குமா என்பதை குஜராத் போலீஸார் தேடி வருகின்றனர். கிடைத்தவுடன் அவை டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த வழக்கில் இதுவரை 122 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக துள்சி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கெளசர் பீபியைக் கொன்று உடலையும் எரித்து விட்டதாக குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியும், இடது சாரிக் கட்சிகளும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 3 ஐபி எஸ் அதிகாரிகள் தவிர மேலும் சில போலீஸாரும் கைதாவார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களில் சிலரை அப்ரூவராக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
கைதாகவுள்ள போலீஸாரில் ஒரு டிஎஸ்பி மற்றும் ஒரு இன்ஸ்பெக்டரும் அடங்குவர் எனத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் இருந்து தப்பவும், கைதான போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றவும் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு கட்டமாகத் தான் இந்த வழக்கை தோண்டித் துருவிய ராய் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல, இவ்வளவு நடந்த பின்னரும் பாஜக தரப்பில் இருந்து ஒரு பேச்சும் இல்லை. இந்த விவகாரத்தில் இருந்து மோடியை காக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, பாலகிருஷ்ணன் ஆகிேயார் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
இந் நிலையில், போலி என்கவுண்டர் விவகாரம் ெதாடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குஜராத் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.