கர்நாடகத்தின் செயலால் தஞ்சை டெல்டா பஞ்ச பிரதேசமாகிவிடும்-வைகோ
நெல்லை:ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு மேலும் மேலும் காவிரி பாசன பகுதிகளை அதிகரித்துக் கொண்டே செல்ல அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மதிமுக செயலாளர் ராஜகோபால் இல்ல திருமண நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்திய குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் விரும்பம். 80 சதவீதம் பேர் மீண்டும் காலம் குடியரசுத் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கலாம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர். இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடியவர். எனவே மதிமுக அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக ஆவதை ஆதரிக்கும்.
காவிரி நீர்ப் பிரச்சனையில் கர்நாடக அரசு ஒப்பந்தத்தை மீறி மேலும் மேலும் பாசன திட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு அனுமதிக்க கூடாது.
அவ்வாறு அனுமதித்தால் தஞ்சை டெல்டா பாசன பகுதிகள் பஞ்ச பிரதேசமாகிவிடும். இது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் கேள்விக்குறி ஆகிவிடும் என்றார்.