சுனாமி நிதியில் ரூ.1 கோடி சுருட்டல்ஜெயக்குமார் மீது போலீசில் புகார்
சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.1 கோடி பணத்தை முறைகேடு செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மீனவர் மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் செல்வராஜ் குமார் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸில் ஒரு புகாகர் கொடுத்துள்ளார்.
அதில், சென்னை நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டு இடமும் தேர்வு செய்யபப்ட்டது.
சாத்தாங்காடு பகுதியில் பள்ளமான இடத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்வு செய்தார். அங்கு வீடு கட்டுவதற்காக முந்தையை அதிமுக அரசு ரூ.4.4 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.
இங்கு வீடுகள் கட்ட டெண்டர் கோராமல், தனது சகோதரர் சாந்தகுமாரிடம் வீடு கட்டும் பணியை விட்டார். கடந்த ஜனவரி மாதம் பணிகள் ஆரம்பித்து பிப்ரவரி மாதத்திலேயே கட்டப்பட்டும் விட்டன.
தீப்பிடிக்காத வீடுகளாக கட்டிக் கொடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இங்கு கட்டப்பட்ட வீடுகளில் இரண்டு முறை தீவிபத்து ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
தீப்பிடிக்காத வீடுகள் என்று கூறப்பட்ட நிலையில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி, வீடுகள் தீயில் கருகியது ஏன். வீடுகளைக் கட்டுவதில் ஜெயக்குமார் ரூ.1 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் புகார் கொடுத்துள்ளார்.
எனவே ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் செல்வராஜ் குமார்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம் திமுக அமைச்சர்கள், திமுகவினர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அடுத்தடுத்து விடுவிக்கப்பட்ட பின்னரும் மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று கேட்டு அதிமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.