வயதில் மூத்த பெண்ணுடன் உல்லாசம்கையில் குழந்தை-தாலி கட்ட மறுப்பு
சென்னை:தன்னை விட 7 வயது மூத்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து, வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு தாலி கட்ட மறுத்த கல்லூரி மாணவர் மீது அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் மளிகைக் கடை வைத்திருப்பவர் லிங்கம். இவரது மகன் ராஜசேகரன். 20 வயதாகும் இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரது கடைக்கு 27 வயதான கவிதா என்பவர் அடிக்கடி பொருட்களை வாங்க வருவார். அவ்வப்போது கடைக்கு வந்து வியாபாரத்தைப் பார்த்துக் கொண்ட ராஜசேகரனுக்கும், அடிக்கடி கடைக்கு வரும் கவிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
வயது வித்தியாசத்தை மறந்து விட்டு இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது முற்றிப் போய் தனியாக வீடு எடுத்து அதில் கவிதாவை தங்க வைத்து குடித்தனமே செய்ய ஆரம்பித்து விட்டார் ராஜசேகரன். இதில் கவிதா உண்டாகி விட்டார்.
3 மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து தனக்குத் தாலி கட்டச் சொல்லி கவிதா வற்புறுத்த ஆரம்பித்தார். ஆனால் அதற்கு ராஜசேகரன் மறுத்து விட்டார்.
என்னை விட வயதில் மூத்த பெண்ணான உனக்கு நான் எப்படி தாலி கட்ட முடியும் என்று படு விவரமாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, தனது குழந்தையுடன் கோயம்பேடு காவல் நிலையத்திற்குச் சென்று ராஜசேகரன் மீது புகார் கொடுத்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாகி விட்ட ராஜசேகரனைத் தேடி வருகின்றனர்.
ராஜசேகரனுடன் குடித்தனம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொண்ட கவிதா ஏற்கனவே கல்யாணமானவர். ஆனால் அவரது நடவடிக்கை பிடிக்காததால், கணவர் பிரிந்து போய் விட்டாராம். அதன் பின்னரே ராஜசேகரனுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் கவிதா என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.