கென்ய விமானம் நொறுங்கி 114 பேர் பலி;தமிழக தம்பதிகளும் பலியான பரிதாபம்
நைரோபி:கென்யாவிலிருந்து சென்ற பயணிகள் விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் இந்தியர்கள் உள்பட அதில் பயணம் செய்த 114 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கென்ய நாட்டின் கென்யா ஏர்வேஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு ஐவரிகோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரிலிருந்து கென்ய தலைநகர் நைரோபிக்குக் கிளம்பியது. விமானத்தில் 105 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 114 பேர் இருந்தனர்.
வழியில் காமரூன் நாட்டில் உள்ள தெளவ்லா நகரில் தரையிறங்கியது. பின்னர் மீண்டும் நைரோபிக்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் விபத்தில் சிக்கியது.
நீட்டி என்ற இடத்தில் பறந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் தெளவ்லா நகரிலிருந்து கிளம்பிய உடனேயே அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில விநாடிகளிலேயே விமானம் வெடித்துச் சிதறி விழுந்தது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமான பயணிகளில் 15 பேர் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமரூன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 34 பேர் பயணம் செய்துள்ளனர். கென்யா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் 9 பேர், தென் ஆப்பிரிக்கர்கள் 7, சீனர்கள் 6, ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் 6, இங்கிலாந்து நாட்டவர் 5, காங்கோ 2, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 உள்ளிட்டோர் விபத்தில் பலியாகி விட்டனர்.
விமானத்தின் சிதறல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விபத்தில் சிக்கிய விமானத்தை 6 மாதங்களுக்கு முன்புதான் கென்யா ஏர்வேஸ் வாங்கியுள்ளது. கடந்த 2000மாவது ஆண்டும் கென்ய ஏர்வேஸுக்குச் சொந்தமான போயிங் விமானம் அபிஜான் நகரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில், 169 பேர் பலியானார்கள்.
தமிழக தம்பதிகளும் பலி:
இந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியும் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில், கோவையைச் சேர்ந்த ஹெவில் (60) மற்றும் அவரது மனைவி ஷெர்லியும் (58) பயணம் செய்துள்ளனர். ஹெவில் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் அதிகாரியாகப் பணியாற்றி 2 வருடங்களுக்கு ஓய்வு பெற்றார்.
இவரது மனைவி ஷெர்லி ஆங்கிலோ இந்தியப் பெண்மணி ஆவார். இவர்களுக்கு நான்கு மகன்கள். இவர்களில் கடைசி மகன் ஹெர்வின் பெங்களூரில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
ஓய்வுக்குப் பின்னர் ஹெவிலுக்கு ஐவரிகோஸ்ட்டில் ஒரு எஸ்டேட்டில் வேலை கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றனர். இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து ஹெர்வின் கூறுகையில், விபத்து நடந்தது பற்றி மட்டும் தான் தகவல் வந்துள்ளது. வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது பெற்றோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றார்.