சட்டசபையை கலக்கிய கொடநாடு எஸ்டேட்!!
சென்னை:சட்டசபையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் குறித்து அமளி ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று சுற்றுலா மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோபாலன், நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிலையே நம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை சிலர் வாங்கியிருக்கிறார்கள் என்றார்.
அப்போது அதிமுகவினர் மொத்தமாக எழுந்து அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸாரும் எழுந்து கோஷம் போட்டனர். இதனால் அவையில் அமளி நிலவியது.
அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, கொட நாடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சிலர் வாங்கியிருப்பதாக உறுப்பினர் கூறுகிறார். அதை அவரால் நிரூபிக்க முடியுமா என்றார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், கோபாலன் பல கட்சிகளில் இருந்தவர் என்று பேசினார். ஆனால், அவர் பேசியதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசுகையில், கோபாலன் கட்சி மாறி வந்ததாக கூறுகிறார் செங்கோட்டையன். ஆனால் ஐஎன்டியூசியைச் சேர்ந்த சின்னச்சாமியை அவர்கள் கட்சியில் வைத்துள்ளனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராமச்சந்திரன், கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவும், சசிசகலாவும் சேர்ந்து எஸ்டேட் வாங்கியுள்ளது முறைப்படி பதிவாகியுள்ளது. இப்போது அங்குதான் எதிர்க்கட்சித் தலைவர் ஓய்வெடுத்து வருகிறார் என்றார்.
இதற்கு அதிமுகவினர் மறுபடியும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீண்டும் அமளி நிலவியது.












Click it and Unblock the Notifications