கென்ய விமான விபத்தில் பார்லே அதிபரும் பலி
சேலம்:கென்ய விமானம் காமரூன் நாட்டில் விபத்தில் சிக்கி 114 பேர் இறந்த சம்பவத்தில், பார்லே நிறுவன அதிபரும் பலியாகியுள்ளார்.
கென்யா ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் காமரூன் நாட்டில் விழுந்து நொறுங்கியதில் 114 பேர் மரணமடைந்தனர். அவர்களில் 15 பேர் இந்தியர்கள். இவர்களில் கெவின் ஜோசப் நிக்லி, ஷாலி நிக்லி, கோச்சேரி ஜோசப், ஸ்டெல்லா, கிரேசி பிரான்சிஸ், அமோல் செளகான், மதுசூதன் மாது, பூஜிதா மதுசூதன், பாக்யா மதுசூதன், மீரா ஷா, ரூபி மேரி, பிரகாஷ் சுந்தரம், கவுர் அமான், கிரீஷன் நல்கத் மற்றும் ஒருவர் ஆவர்.
கெவின் ஜோசப் நிக்லி, ஷாலி நிக்லி ஆகியோர் வால்பாறையில் வசித்து வந்தனர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். வால்பாறையில் உள்ள எஸ்டேடில் பணியாற்றி ஓய்வு பெற்ற கெவின் பின்னர் உகாண்டாவில் வேலை கிடைத்ததால் மனைவியுடன் அங்கு சென்றார். ஷாலியும் அங்கு ஆசிரியையாகப் பணியாற்றினார்.
வேலைக்குச் சென்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஊருக்குத் திரும்ப வந்தபோதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இவர்களுக்கு கென்னத், கெல்வின், கீத், ஹெர்வின் என்று நான்கு மகன்கள் உள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிளில் வசித்து வருகின்றனர்.
தங்களது பெற்றோர் இறந்தது குறித்து சேலத்தில் வசிக்கும் மகன் கென்னத் கூறுகையில், காமரூனில் இருந்து நைரோபிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
காமரூன் விமான நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள எனது சகோதரர் ஹெர்வினிடம் பேசியுள்ள அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவோம் எனக் கூறியுள்ளனர்.
ஆனால் விமானம் விபத்தில் சிக்கி அவர்கள் பலியாகி விட்டதாக செய்தி வந்துள்ளது. ஆனால் மேற்கொண்டு விவரம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தோம்.
காமரூன் நாட்டில் வசிக்கும் எனது தாய் மாமாக்கள் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றனர். ஆனால் விமானம் விழுந்த பகுதியை நெருங்கமுடியவில்லை. பின்னர் மாலையில்தான் எனது தாய், தந்தை இறந்தது உறுதியானது. இந்தத் திடீர் அதிர்ச்சியால் நாங்கள் குழம்பிப் போயுள்ளோம். என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்.
விபத்தில் சிக்கி இறந்தவர்களில் கோச்சேரி ஜோசப், ஸ்டெல்லா, கிரேசி பிரான்சிஸ் ஆகியோரும் வால்பாறையில் உள்ள எஸ்டேட்டில்தான் பணியாற்றி வந்தனர். இவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
அமோல் செளகான், பிரபலமான பார்லே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். வியாபார விஷயமாக போய் விட்டுத் திரும்பும்போது பலியாகியுள்ளார்.
செளகானுக்கு சமீபத்தில்தான் கல்யாணம் ஆகியுள்ளது. அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications