இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசுமுடிவு?!
கொழும்பு:புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை.
அமைதி உடன்பாடு அமலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானால், புலிகளைத் தாக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசு விட்டுத் தராது.
கடந்த 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இதுவரை அது 10,000 முறை மீறப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தம் செத்துவிட்டதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என்றார்.
வன்னி பகுதியை விமானங்களைக் கொண்டு உளவு பார்ப்பது ஒப்பந்தந்தை மீறிய செயல் என நார்வே அமைதி கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, அது குறித்துப் பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
சமீபகாலமாக விமானத் தாக்குதலும் புலிகள் நடத்தி வருவதால் வான் வழியாக உளவு பார்ப்பதை அதிகரிக்கப் போகிறோம்.
புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப் படையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ககிலியா.
2002ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி எந்தத் தரப்பாவது ஒப்பந்ததை கைவிட முடிவு செய்தால் 14 நாள் நோட்டீஸ் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மீது விமானங்கள் தாக்குதல்:
இதற்கிடையே இலங்கை ராணுவ விமானங்கள் இன்று கிளிநொச்சி மீது தாக்குதல் நடத்தின.
புலிகளின் பயிற்சி முகாம்களைத் தாக்கியதாக விமானப் படை கூறியுள்ளது.
மிக் விமானங்கள் வாங்கிய இலங்கை:
இந் நிலையில் புலிகளின் விமானங்களை வானிலேயே தாக்கி அழிக்க மிக்-21 ரக விமானங்களை இலங்கை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.