திருக்கோவிலூர்: திருவிழாவில் ஜாதி கலவரம்போலீஸ் தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே நடந்த தேர்த் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கல் கிராமத்தில் திரிவுபதியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டபோது தேருக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேள தாளங்களுடன் வந்தனர்.
அங்கு இன்னொரு ஜாதியினர் அவர்களை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் தரப்பை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமதானப்படுத்தினர். ஆனால் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். அடிதடியும் நடந்தது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அவர் அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.