பீச் ரோட்டில் பைக் ரேஸ்: 2 பேர் கைது
சென்னை:போக்குவரத்து நெரிசல் மிக்க கடற்கரை காமராஜர் சாலையில், பந்தயம் கட்டி படு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு வாலிபர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பந்தயம் கட்டி படு வேகமாக, படு சத்தத்தோடு பைக்குகளை ஓட்டிச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் அந்த பைக் பார்ட்டிகள் அதற்குள் எலியட்ஸ் கடற்கரையை விட்டு மெரீனா கடற்கரை உள்ள காமராஜர் சாலைக்குப் பறந்து விட்டனர்.
இதையடுத்து மெரீனா கடற்கரை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போலீஸார் அதி வேகமாக பைக்குகளில் வந்தவர்களை உழைப்பாளர் சிலை அருகே மடக்கினர். இதில் சுகுமார், சுதாகர் ஆகிய இருவர் மட்டும் சிக்கிக் கொண்டனர்.
வண்டியை போலீஸார் நிறுத்த முயன்றபோது அவர்களை இடித்துத் தள்ளி விட்ட தப்ப சுகுமார் முயன்றுள்ளார். இருப்பினும் போலீஸார் லாவகமாக அவரையும், சுதாகரையும் மடக்கிப் பிடித்தனர்.
எலியட்ஸ் முதல் மெரீனா வரை பந்தயம் கட்டி யார் முதலில் செல்வது என்று நண்பர்களுக்குள் போட்டியாம். படு சத்தத்தோடு, பொதுமக்களை அலற வைக்கும் வகையில் இவர்கள் 8 பேரும் பைக்குகளை ஓட்டிச் சென்றுள்ளனர்.
பிடிபட்ட 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செயய்ப்பட்டனர். தப்பி ஓடி விட்ட மற்ற 6 பேரையும் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.