மும்பை குண்டு வெடிப்பு: 23 பேர் விடுதலை
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 23 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தாவூத் இப்ராகிம், நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இதில் 123 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது குண்டு வைத்ததாகவும், சிலர் மீது சதி திட்டம் தீட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை 14 ஆண்டுகளாக மும்பை தடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்தில், 123 பேரில் 100 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் டைகர் மேமனின் சகோதரர் உள்பட 47 பேர் மீது கடுமையாக குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளது. நடிகர் சஞ்சய் தத் உள்பட மற்றவர்கள் சாதாரண குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரத்தை இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி 123 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகும்டி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து 3 பேர் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 23 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி இன்று அறிவித்தார். மற்றவர்களுக்கான தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்படும்.