சென்னை புறநகர்களில் இடி, மழை:நகர் முழுவதும் கடும் அணல்
சென்னை:சென்னை நகரில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்தது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் இடி, சூறைக் காற்றுடன் நல்ல மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் உக்கிரத்தை எட்டிக் கொண்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் கடும் வெயில் வாட்டி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் தகித்தது. கிட்டத்தட்ட 107 டிகிரி வெயில் அடித்தது.
இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. சாலைகளில் இரு சக்கர வாகனங்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் அணல் காற்று வீசி மக்களை சித்திரவதை செய்தது.
நகரில் கடும் வெயில் நிலவிய போதிலும் புறநகர்ப் பகுதிகளில் மாலையில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக வண்டலூர், ஊரப்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மேலும் சூறைக்காற்றும் பலமாக வீசியதால் ஜி.எஸ்.டி. சாலையின் நடுவே நெடுஞ்சாலைத் துறையினர் வளர்த்து வந்த மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. விளம்பர பேனர்களும் இந்தக் காற்றில் சேதமடைந்தன.