எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி விருந்து
சென்னை:அழகிரி ஆதரவாளர்களால் மதுரையே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்து கொடுத்து உபசரித்தார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையொட்டி சட்டசபையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசவுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று சட்டசபை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.
தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர தலைமைச் செயலாளர் திரிபாதி, சென்னை மேயர் சுப்ரமணியன், எம்.ஜிஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், உள்ளிட்டேரும் பங்கேற்றனர்.
இரவு ஏழே முக்கால் மணியிலிருந்து 9 மணி வரை விருந்து உபச்சாரம் நடந்தேறியது.