For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் மெளனம் ஏன்?- யாருக்கு ஆதரவு?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:மு.க.அழகிரி - மாறன் சகோதரர்கள் இடையிலான மோதலில் மு.க.ஸ்டாலின் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் அண்ணன் அழகிரிக்கு ஆதரவாகவே ஸ்டாலின் இருப்பதாகத் தெரிகிறது.

ஸ்டாலின், அழகிரி மோதல் உலகறிந்த விஷயம். இருவரும் எதிரும் புதிருமாக இருந்ததால் தென் மாவட்டங்களில் திமுக படாதபாடு பட்டது. அடிக்கடி அடிதடி, மோதல், வெட்டுக் குத்து, உச்சகட்டமாக தா.கிருட்டிணன் படுகொலை.

கிருட்டிணன் படுகொலைக்குப் பிறகு அழகிரியையும், ஸ்டாலினையும் அழைத்து கருணாநிதியே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கைகுலுக்க வைத்தார்.

அப்போதே தனது தந்தையிடம், தம்பிக்கு துணையாக இருப்பேன், ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட மாட்டேன், அவரே உங்களது வாரிசாகவும் வரட்டும் ஆட்சேபனை இல்லை என்று பெருந்தன்மையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி விட்டு வந்தார் அழகிரி என்று ஒரு பேச்சு உண்டு.

அதன் பின்னர் இருவருக்கும் இடையே எந்த மனஸ்தாபமும், போட்டியும், புகைச்சலும் இல்லை என்பது மதுரை திமுகவினரின் கூற்று. அதில் உண்மையும் இருந்தது.

ஆனால் தயாநிதி மாறன் வருகையால் அழகிரிதான் முதலில் கொந்தளித்தவர்.

தம்பியை வாரிசாக வரித்து விட்டோம், இப்போது தயாநிதி மாறனைக் கொண்டு வந்தால், அது பின்னால் தேவையில்லாத விளைவுகளை ஏற்படுத்தும் என கருணாநிதியிடம் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தாராம் அழகிரி.

இந் நிலையில் தான் ஸ்டாலினை தயாநிதி மாறனும், சன் டிவியும் தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்தன. இதனால் ஸ்டாலினும் கூட அப்செட்டாகிப் போனார். இருந்தாலும் பொறுமை காத்தார்.

சர்ச்சைக்குரிய அடுத்த வாரிசு கருத்துக் கணிப்பால் ஸ்டாலினும் கூட அப்செட் ஆகிப் போனாராம். தன்னை கலைஞரின் வாரிசாக ஏற்றுக் கொள்ள அழகிரியே தயாராக இருக்கும்போது இது தேவையில்லாமல் தனக்கும், அழகிரிக்கும் சிண்டு முடியும் வேலை என ஸ்டாலின் கருதுகிறாராம்.

இதன் மூலம் தென் மாவட்ட திமுகவில் பிளவை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என கோபம் கொண்டாராம் ஸ்டாலின்.

கருத்துக் கணிப்பு வெளியான அன்று காலையிலேயே அழகிரியைப் போனில் பிடித்த ஸ்டாலின், இது தவறான கருத்துக் கணிப்பு எனக்கு பிடிக்கவில்லை, இதன் பின்னணியில் நான் இல்லை, தவறாக நினைத்து விட வேண்டாம் என்று விளக்கியுள்ளார்.

அதைப் புரிந்து கொண்ட அழகிரியும், எனக்கும் அது புரிகிறது, அவர்களது உள்நோக்கம் திமுகவினருக்கும் புரிய வேண்டும், நிச்சயமாக அவர்கள் நினைப்பது நடக்காது என்று ஸ்டாலினிடம் அவர் கூறியுள்ளார்.

எனவே தற்போதைய நிலையில் ஸ்டாலின் வெளிப்படையாக கருத்துக் கூறாவிட்டாலும் கூட அழகிரிக்கே அவர் ஆதரவாக இருப்பார் என்று திமுகவினர் கருதுகிறார்கள்.

இப்போதைய சூழ்நிலையில், ஸ்டாலினுடன் அழகிரி கை கோர்த்து மாநில அளவில் தீவிரமாக அரசியலில் குதிப்பார், மாறன் சகோதரர்கள் கருணாநிதி குடும்பம் மற்றும் திமுகவிலிருந்து பிரித்து விடப்படுவர் என்பதே திமுகவினர் மத்தியில் நிலவி வரும் பேச்சாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X