தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி-அதிமுக கோரிக்கை
சென்னை:தமிழகத்தில் திமுக அரசை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமலாக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
அதிமுக ராஜ்யசபா எம்பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
மதுரையில் கடந்த வாரம் மே 9ம் தேதி பயங்கர வன்முறை நடந்தது. இதில் அப்பாவி இளைஞர்கள் 3 பேர் பரிதமாக உயிரிழந்தனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 356ன் படி திமுக அரசு பொது மக்களை காக்க தவறிவிட்டது.
தமிழகத்தில் சட்டம், ஒழுக்கு சீர்குலைந்து விட்டது. இதற்கு உதாரணங்களாக கடந்த உள்ளாட்சித் தேர்தலின்ேபாது திமுகவினர் நடத்திய வன்முறை, கலவரம், ரவுடியிஸம் ஆகியவையும், நக்ஸல்கள் மற்றும் எல்டிடியினரின் ஆயுதக் கடத்தலும் உரிய சான்றுகளாகும்.
இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை இந்த அரசை வைத்துக் கொண்டு சரி செய்வது ஆகாத காரியம்.
ஊழல், முறைகேடுகளால் தவறான முறையில் ஈட்டிய ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு மாறன் குடும்பமும் கருணாநிதி குடும்பமும் போடும் சண்டையால் தினகரன் ஊழியர்களி 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறையில் அழகிரிக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. போலீஸ் உதவியோடு கலவரத்தை நடத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்பாக கைதான அனைவரும் மாலையே விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
தனது குடும்பத்தை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதியால் போலீசையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசை உடனடியாக கலைத்து விட்டு, தமிழகத்தில் குடியரசு தலைவர் தலைமையில் ஆட்சி அமலாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.