இலங்கை: கருணா கோஷ்டியில் பிளவுபிள்ளையன் தலைமையில் புதிய அணி
கொழும்பு:இலங்கை அரசு மற்றும் ராணுவத்தின் உதவியுடன் இயங்கி வரும் கருணாவின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. பிள்ளையன் என்பவர் கருணாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளார்.
கருணாவையும் பிரபாகரனையும் எதிர்த்துப் பேராடப் போவதாக பிள்ளையன் அறிவித்துள்ளார். தன்னுடன் ஏராளமான வீரர்கள் கருணாவைப் பிரிந்து வந்துவிட்டதாக பிள்ளையன் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.
டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு பிள்ளையனின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில்,
பிரபாகரனின் வன்னி வீரர்களையும், கருணா அம்மனையும் எதிர்த்துப் போரிடுவோம். கருணாவுடன் சமாதானாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கருணாவை விட்டு பெரும்பாலான வீரர்களும், தளபதிகளும், அரசியல் பிரிவு தலைவர்களும் பிரிந்து பிள்ளையனுடன் வந்துவிட்டனர். அதில் முக்கியமானவர்கள் ஜெயம், மர்கன், தூயவன், ஈழமாறன், பிரதீப் மாஸ்டர், சுரங்கா ஆகியோரும் அடங்குவர். இப்போது சுமார் 350 வீரர்களுடன் பிள்ளையன் திரிகோணமலையில் முகாமிட்டுள்ளார்.
கருணாவுடன் இப்போது சின்னதம்பி, பாரதீ, திலீபன், ஜீவேந்திரன் உள்ளிட்ட சில மூத்தவர்கள் தான் உள்ளனர்.
கருணாவின் ராணுவப் பிரிவு முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.
பாஸிஸ சக்தியான பிரபாகரன் மற்றும் அவரது வன்னி வீரர்களுடன் நாங்கள் கைகோர்க்க மாட்டோம். பிரபாகரனிடம் இருந்து தமிழ் மக்களை காப்போம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கருணா தலைவராகவும் அதன் அரசியல் பிரிவின் தலைவராகவும் ராணுவப் பிரிவின் துணைத் தலைவராகவும் பிள்ளையன் இருப்பது என்று ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இது கருணாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் பிளவு ஏற்பட்டது என்றார்.
இந் நிலையில் பிள்ளையன் பிரிவாலும் பிரபாகரனாலும் உயிருக்கு ஆபத்து உள்ளதால் கருணாவை கொழும்புக்கு அரசு பேக்-அப் செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இலங்கை மோதல்- 7 புலிகள் பலி?:
இலங்கையில் ராணுவம், விடுதலைப்புலிகளிடையே நடந்த மோதலில் 7 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் தெரிவிக்கையில்,
நேற்று மாலையிலிருந்து யாழ்பாணத்துக்கு வடக்கே சண்டிலிப்பை என்ற இடத்தில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடந்த மோதலில் இன்று காலை ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இலங்கை பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவிக்கையில்,
நேற்று மதுவிற்கு கிழக்கு பகுதியிலும், ஓமந்தைக்கு மேற்கு பகுதியில் நடந்த மோதலில் இலங்கை ராணுவம் 7 விடுதலைப் புலிகளை கொன்றது என்றார்.
ஆனால் இதுகுறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications