வளர்ப்பு மகன் திருமண செலவு-கணக்கு காட்ட ஜெ. தயாரா?: திமுக கேள்வி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் பொன்விழா செலவு கணக்குகளைத் தரத் நாங்கள் தயார். அதேபோல வளர்ப்பு மகன் திருமணத்துக்கு செய்த செலவுகள் கணக்கைத் தர ஜெயலலிதா தயாரா? என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதிமுக நியமிக்கும் கணக்களாரின் பரிசீலனைக்கு கருணாநிதியின் பொன்விழா முழு செலவுக் கணக்கையும் உட்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
முதல்வர் கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழாவில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு அவரை பாராட்டினர். அதில் பொறாமை, எரிச்சல், புழுக்கத்தில் உள்ள ஜெயலலிதா எதை எதையோ அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.
பொன்விழா செலவுகள் அனைத்தையும் விழா குழுவே ஏற்றுள்ளது என ஏற்கனவே கூறியிருக்கிறேன். பிரதமர் மன்மோகன் சிங் வந்து போன செலவை, மத்திய அரசு ஏன் ஏற்க வேண்டும்? என ஜெயலலிதா கேட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் நடந்த போது, மாநில முதல்வர்கள் சிலர் கலந்து கொண்டார்கள். அவர்கள் சென்னையில் தங்கி சென்றதற்கான செலவுகளை ஜெயலலிதாவா ஏற்றுக் கொண்டார்?
திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு ஜெயலலிதா தன் சொந்த வருமானத்தில் இருந்தா செலவு செய்தார்?
2004ல் ஒரு தனியார் நிறுவனம் தங்கத்தாரகை பட்டம் கொடுத்ததற்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டது, அதில் அரசு அதிகாரிகளையும் கலந்து கொள்ள செய்து மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான செலவு ஜெயலலிதாவின் சொந்த செலவுகளா?
சட்டப் பேரவையில் எம்ஜிஆர் படத்திறப்பு விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையில் ஜெயலலிதா அமர்ந்தார். அவரது தோழி சசிகலா அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்படிப்பட்டவர் முதல்வர் கருணாநிதியின் பொன்விழா செலவுகளை கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை.
பொன்விழாவுக்கான செலவு கணக்குகளை அதிமுக நியமிக்கும் கணக்களாரிடம் நாங்கள் கொடுக்க தயார். அதேபோல இந்த அறிக்கையில் நான் கேட்டுள்ள செலவுக் கணக்குகளை என் கணக்களாரிடம் கொடுக்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா என அவர் கூறியுள்ளார்.