பாஜகவை பற்றி பேச கருணாநிதிக்கு தகுதியில்லை-இல.கணேசன்
சென்னை:பாஜக பற்றி பேசவோ, சந்திக்கவோ யாருக்கும் எந்த தகுதியும் இல்லை என பிஜேபி தமிழக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, சேது சமுத்திரத் திட்டத்தை தடுப்பவர்கள் துரோகிகள் என கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
மனிதனால் உருவாக்கப்பட்ட தொன்மையான பொருள் உலகிலேயே ராமர் பாலம் மட்டும் தான். இதுகுறித்து முதல்வரும், மத்திய அமைச்சர் பாலுவும் தவறான கருத்துகளை மக்களிடையே கூறியுள்ளனர்.
சேது சமுத்திர திட்டத்திற்கு கடவுளை காரணம் காட்டி எதிர்ப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் மதத்தையோ, கடவுளையோ குறிப்பிடவில்லை. ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்க்கிறோம்.
உலக நாடுகளில் உள்ளவர்கள் தொன்மையான பொருட்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் இங்கு அழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராமர் பாலத்தை உண்டு என்று கூறினால் ராமர் வாழ்ந்ததை ஒப்புக் கொள்ளவேண்டிய நிலை ஏற்படும். அதனால் அவர்களுடைய பகுத்தறிவு தகர்ந்துவிடும் என்பதால் ராமர் பாலம் பற்றிய உண்மைகளை ஏற்க மறுக்கின்றனர்.
சேது சமுத்திர திட்டம் பற்றி குறிப்பிடுகையில் பெருச்சாளிகள் என முதல்வர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்து விசாரணை கமிஷன் அமைக்கும்போது யார் பெருச்சாளிகள் என்பது புரியும்.
சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ராமர் பாலம் இடிக்காமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறோம்.
சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படுவதை பாமக எதிர்த்தவுடன் முதல்வர் அத்திட்டத்தை கைவிட்டார். அதுபோல் ராமர் பாலத்தை இடிப்பதை தவறு என எதிர்கட்சிகள் கூறினால் அதை திருத்தி கொள்வதுதான் சிறந்தது.
முதல்வர் கருணாநிதி ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடிகள் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும்போது ஆதாம் பாலம் என்றழைக்கப்படும் ராமர் பாலம் இருப்பதை குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் முதல்வர், சேது சமுத்திர திட்டத்தை இதிகாச பெயரால் தடுப்பவர்கள் துரோகிகள் என கூறியுள்ளார். பாஜகவின் தேச பக்தியை பற்றி போசவோ, சந்தேகப்படவோ நேற்றைய கூட்டத்தில் பேசியவர்களுக்கு எந்த அருகதையும், யோக்யதையும் இல்லை.
நாளை மன்னார்குடியில் பாஜக செயற்குழு கூடுகிறது. அதில் ராமர் பாலம், பத்திரிக்கை சுதந்திரம், சில்லறை வணிகம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.