மன்மோகன் போட்டியின்றி ராஜ்யசபாவுக்குத் தேர்வு
குவஹாத்தி:அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்ட பிரதமர் மன்மோகன் சிங் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் ஜூன் 14ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மன்மோகன் சிங்கால் ஏற்படும் காலியிடம் உள்ளிட்ட இரு ராஜ்யசபா இடங்களுக்கு அஸ்ஸாமில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் மன்மோகன் சிங்கும், அஸ்ஸாம் கன பரிஷத் சார்பில் குமார் தீபக் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நேரத்தில், மதாங் சிங் என்பவரும் மனு தாக்கல் செய்ததால் போட்டி ஏற்படும் சூழல் நிலவியது.
இந்த நிலையில் மதாங் சிங் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மற்றும் குமார் தீபக் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தாஸ் அறிவித்தார்.
அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படுவது இது 4வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியான மன்மோகன் சிங், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1995லும், 2001லும் அஸ்ஸாமிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார் மன்மோகன் சிங்.