மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்துகொடுமைப்படுத்திய கொடூர தந்தை கைது
ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது.
தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின்.
இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 99 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மால்டினால் சித்திரவதைக்கு ஆளான அவரது குழந்தை பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் முகம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
முதலில் குழந்தையின் முகத்தில் சுடு தண்ணீர் தவறுதலாக பட்டு விட்டதாக கூறியுள்ளார் மால்டின். ஆனால் போலீஸார் முறைப்படி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார்.
கடும் மன அழுத்தம் காரணமாக குழந்தையை அடுப்பில் வைத்து விட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார் மால்டின்.