மத்திய அமைச்சர் குடும்பத்தால் தீட்டு:குருவாயூர் கோவிலில் தண்ணீர் தெளித்து பூஜை!
சென்னை:மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் மற்றும் அவரது கிறிஸ்தவ மனைவி வந்து சென்றதால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. இது கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி. இவரது மருமகள் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ரவி, அவரது மகன் ரவிகிருஷ்ணா, மனைவி மற்றும் அவரது பேரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ரவியின் பேரனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவியின் மருமகள் இந்து சமயத்தவர் அல்லாத காரணத்தால், அவர்கள் சென்ற பின்னர் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டு, கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
தூய்மைப்படுத்தும் பூஜை நடந்ததை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து வயலார் ரவி பெரும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தேவையில்லாத ஒன்று. பக்தர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. என்னையும், எனது குடும்பத்தையும், எனது பரம்பரையையும் கோவில் நிர்வாகம் அவமானப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் எனது ஒட்டுமொத்த பரம்பரையே கோவிலுக்கு வரக் கூடாது என்று கூறுவது போல உள்ளது என்றார்.
ரவிகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், இந்த சம்பவம் அவசியமற்றது. இதுகுறித்து பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார்.