இந்தோனேஷியா, தாய்லாந்தில் கடல் கொந்தளிப்பு:ஒருவர் பலி- சுனாமி பீதியில் மக்கள்
பாங்காக்:இந்தோனேஷியா, தாய்லாந்து கடலில் ராட்சத அலைகள் ஏற்பட்டன. இந்த அலையில் சிக்கி ஒருவர் பலியானர். இதனால் மக்கள் சுனாமி பீதியில் உள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு இந்தோனேஷியா. இந்த சுனாமியில் அங்கு ஏராளமானேர் உயிரிழந்தனர்.
இந் நிலையில் இந்தோனேஷியா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. பாலி தீவில் உள்ள குடா கடற்கரை, ஜாவா தீவு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஏற்பட்டன.
ராட்சத அலையால் கடலோரத்தில் உள்ள ஏராளமான கடைகள், ஹோட்டல்கள், கட்டிடங்கள் சேதமடைந்தன. ராட்சத அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். நேற்று சுமத்ரா தீவு உள்ளிட்ட இடங்களில் ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் சுனாமி பீதியில் ஆழ்ந்தனர்.
கடலில் ஆக்ரோஷத்தை தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்தோனேஷிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல தாய்லாந்து நாட்டிலில் உள்ள புக்கட் தீவில் 3 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தது.
இதனால் கடலோரத்தில் இருந்த ஹோட்டல்கள், கடைகள், வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மேலும் பொதுமக்கள் சுனாமி பீதி அடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.
ராட்சத அலைகள் காரணமாக இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சுனாமி பீதி உருவாகியுள்ளது. இருப்பினும் இந்த நாடுகளில் நில நடுக்கம் ஏதும் ஏற்படவில்லை, சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுவிக்கப்படவில்லை.
தமிழக கடலோரப் பகுதிகளிலும் ராட்சத அலைகள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications