செப்டிக் டேங்க் விஷவாயு தாக்கி 3 பேர் பலி
சென்னை:சென்னை மடிப்பாக்கம் பகுதியில், கழிவு நீர்த் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை மடிப்பாக்கத்தை அடுத்துள்ள புழுதிவாக்கம், ராம் நகர் வடக்கு பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரராஜன். 53 வயதான இவர் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார்.
இவரது வீட்டுக் கழிவு நீர்த் தொட்டி நேற்று சுத்தம் செய்யப்பட்டது. கழிவு நீரை அகற்றிய பின்னர் தொட்டியின் கீழே தேங்கிக் கிடந்த மண்ணை அப்புறப்படுத்துவதற்காக ராஜேந்திரன் என்ற தொழிலாளி தொட்டிக்குள் இறங்கினார்.
மண்ணை ஒரு வாளியில் அள்ளி மேலே நின்ற சுந்தர்ராஜனிடம் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி ராஜேந்திரன் சுருண்டு விழுந்து இறந்தார். இதைப் பார்த்த சுந்தர்ராஜன் உள்ளே இறங்கி ராஜேந்திரனைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் விஷ வாயு தாக்குதலுக்கு உட்பட்டு பலியானார்.
இருவரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்ததைப் பார்த்த சுந்தர்ராஜனின் மனைவி பஞ்சவர்ணம் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியைக் கோரினார். இதையடுத்து பக்கத்து கட்டடத்தின் வாட்ச்மேன் பாண்டு ஓடி வந்தார்.
இருவரும் விழுந்து கிடந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அவரும் விஷ வாயு தாக்கி உள்ளே விழுந்து இறந்தார். அடுத்தடுத்து 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications