மதுரையிலிருந்து பாகிஸ்தானுக்கு, அன்புடன்!
காஞ்சிபுரம்:தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர் மதுரை வீரன் (40). இவர் ஒரு டாக்சி டிரைவர். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (30). வனத்துறை ஊழியர் இவர்.
கடந்த 11ம் தேதி இருவரும் மதுரையிலிருந்து சைக்கிளில் ஒரு வித்தியாசமான பயணத்தை தொடங்கியுள்ளனர். தீவிரவாதம் ஒழிய வேண்டும், அன்பு தழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்துள்ள இந்த சைக்கிள் பயணம் பாகிஸ்தானில் நிறைவுறப் போகிறது.
மதுரையில் கிளம்பிய இவர்கள் திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரத்தை வந்தடைந்துள்ளனர். அங்கு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்தனர். அவரிடம் உலக அமைதியை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில்,
ஆண்டுதோறும் இதுபோல ஒரு பயணத்தை மேற்கொள்கிறோம். 2002ம் ஆண்டு டெல்லிக்குப் பயணித்தோம். பின்னர் காஷ்மீருக்கும் சென்றோம்.
இது எங்களின் 18வது பயணமாகும். உலக மக்கள் அனைவரும் வன்முறை, தீவிரவாதம் ஒழிந்து, அமைதியாக வாழவேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் என்றனர்.
தொடர்ந்து சைக்கிளிலேயே பயணம் செய்து ஜூன் 15ம் தேதிக்குள் பாகிஸ்தானின் லாகூகர் நகருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி வேலூர், ஓசூர், பெங்களூர், மத்திய பிரதேசம், உ.பி., ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் வழியாக வாகாவை அடைகின்றனர். பின்னர் அங்கிருந்து லாகூர் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications