சிங்கப்பூரில் கொலை முயற்சி வழக்கில்சிக்கிய மும்பை மாணவர்
சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரையும், அவரது வேலைக்காரர்களையும் கொலை செய்ய முயற்சித்ததாக மும்பையைச் சேர்ந்த மாணவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்தவர் பட்லா ஜதீன் நவீன். 21 வயதாகும் இவர் சிங்கப்பூரில் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி 72 வயது தொழிலதிபர் மாணிக் சஹானியைக் கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார் நவீன்.
மேலும், சஹானியின் இரு வேலைக்காரர்களை சரமாரியாக அடித்ததாகவும், சஹானியின் 37 வயது மகள் மம்தா மாணிக்கை தவறான நோக்கத்துடன் அடைத்து வைத்ததாகவும் பட்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கு ஜூலை 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 13ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பட்லா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்லாவுக்கு எதிராக 53 சாட்சியங்களை அரசுத் தரப்பு சமர்ப்பித்துள்ளது.
நேற்று பட்லா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது தாயார் மும்பையிலிருந்து வந்திருந்தார். விசாரணை நடந்தபோது அவர் கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications