திருப்பூர் பார் விபத்துக்கு அரசே காரணம்: விஜய்காந்த்
திருப்பூர்: திருப்பூர் டாஸ்மாக் பார் மீது சுற்றுச்சுவர் விழுந்து 28 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
திருப்பூரில் டாஸ்மாக் கடை பார் மீது கருங்கல் சுவர் விழுந்ததில் 28 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு விஜய்காந்த் நேற்று அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுக் கடை நடத்துபவர்கள் பத்துக்கு பத்து அடி என்ற அளவில் பார் வைக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. மேலும் ஸ்நாக்ஸ் மட்டுமே விற்க அனுமதியும் உள்ளது.
ஆனால் விபத்து நடந்த பாரில் அடுப்பு வைத்து பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி பார் செயல்பட்டதே இந்த விபத்துக்கு காரணம்.
பார் மீது இடிந்து விழுந்த சுவர் உயரமாகவும், நீளமாகவும் கட்டப்பட்டுள்ளது. இப்படி கட்டப்படும் சுவர்களுக்கு தூண் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் தூண் எதுவும் கட்டப்படவில்லை. இதிலும் விதிமீறல் நடந்துள்ளது. இதுவும் விபத்துக்கு ஒரு காரணம்.
அரசுக்கு வருவாய் வருவதற்காக அரசு பார் நடத்துவது தவறல்ல. ஆனால் விதிமுறைகளை மீறி நடத்த அனுமதித்துள்ளதால் தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறது. ஆகவே இந்த விபத்துக்கு முழு பெறுப்பும் அரசே ஏற்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் தலா ரூ. 10,000 வழங்கப்படும் என அவர் கூறினார்.